திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், எட்டு ஒன்றியங்களில், 27ம் தேதியும், மீதமுள்ள, ஆறு ஒன்றியங்களில், 30ம் தேதியும், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல், வரும், 27 மற்றும் 30ம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 14 ஊராட்சி ஒன்றியங்களில், 526 கிராம ஊராட்சி தலைவர், 3,945 ஊராட்சி வார்டு உறுப்பினர், 230 ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் 24 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு, தேர்தல் நடக்கிறது.வாக்காளர்கள், ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் என, நான்கு ஓட்டு போட்டு, நான்கு பேரை தேர்ந்தெடுக்க வேண்டும்.திருவள்ளூர் மாவட்டத்தில், மொத்தம் உள்ள, 14 ஒன்றியங்களில், திருவள்ளூர், கடம்பத்துார், பூண்டி, பூந்தமல்லி, திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய எட்டு ஒன்றியங்களில், 27ம் தேதி தேர்தல் நடைபெறும்.எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், புழல், சோழவரம் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய ஆறு ஒன்றியங்களில், 30ம் தேதி தேர்தல் நடைபெறும்.