Type Here to Get Search Results !

தாஜ்மகால் திறக்கப்பட்டது- சுற்றுலா பயணிகள் மீண்டும் ஆர்வம்


கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மகால் காதல் சின்னம் மூடப்பட்டது. 17-ம் நூற்றாண்டின் முகலாய மன்னர் ஷாஜகானால் சலவை கற்கள் கொண்டு கட்டப்பட்ட தாஜ்மகால் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த 6 மாதமாக தாஜ்மகால் மூடப்பட்டு கிடந்தது. பராமரிப்பு பணிகள் மட்டும் நடைபெற்று வந்தன. தாஜ்மகால் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். அதுபோல ஆக்ராவில் தாஜ்மகாலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை வைத்து வாழ்க்கை நடத்தி வரும் மக்களும் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். எனவே தாஜ்மகாலை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து இன்று தாஜ்மகால் திறக்கப்பட்டது. தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. முதல் நாளான இன்று ஏராளமானோர் தாஜ்மகாலுக்கு வந்தனர். ஆன்லைன் மூலம் தைவான் நாட்டைச் சேர்ந்த 160 பேர் இன்று தாஜ்மகாலை சுற்றி பார்க்க முன் பதிவு செய்திருந்தனர். இதனால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை சமூக இடைவெளியுடன் பிரித்து அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் அதிகபட்சமாக 5 ஆயிரம் பேரை தாஜ்மகாலுக்குள் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. 2 கட்டங்களாக அவர்களை பிரித்து இடைவெளி விட்டு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளனர். தாஜ்மகாலுக்குள் நுழையும் முன்பு கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்து கொள்ள ஒவ்வொருவரும் அறிவுறுத்தப்படுவார்கள் என்று தொல்பொருள் ஆய்வுத்துறையினர் தெரிவித்தனர். ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் வழக்கம் போல தாஜ்மகாலுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாஜ்மகாலை தற்போது மத்திய தொழில்படை பிரிவினர் பாதுகாத்து வருகிறார்கள். அவர்கள் தாஜ்மகாலுக்கு வரும் ஒவ்வொருவரிடமும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1965, 1971-ம் ஆண்டுகளில் போர்கள் காரணமாக தாஜ்மகால் மூடப்பட்டு இருந்தது. ஆனால் நீண்ட நாட்கள் மூடப்பட்டது இப்போது தான். 6 மாதங்களுக்கு பிறகு தாஜ்மகால் திறக்கப்பட்டுள்ளதால் ஆக்ரா நகர மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Top Post Ad

Below Post Ad